சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-25

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-25
----
இன்பத்தில் ஒரு மகிமை இருக்கிறது; துன்பத்திலும் ஒரு மகிமை இருக்கிறது. ஏன், தீமையினால் பயன்கூட இருக்கிறது என்று நான் துணிந்து சொல்வேன். துன்பத்தால் நாம் பெறும் பாடம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா என்று பின்னால் நாம் வருத்தப்படும் பலநூறு காரியங்களைச் செய்து விடுகிறோம். ஆனால் அந்தக் காரியங்கள் நமக்கு எத்தனை உயர்ந்த பாடங்களைக் கற்பிக்கின்றன.
----
என்னைப் பொறுத்தவரையில், நான் சில நல்ல காரியங்களைச்செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன். பல தீய காரியங்களைச் செய்திருக்கிறேன் என்பதிலும் மகிழ்கிறேன். சில காரியங்களைச் சரியாகச் செய்ததற்காக மகிழ்கிறேன். அதே வேளையில் பல தவறுகள் செய்ததற்காகவும் மகிழ்கிறேன். ஏனென்றால், என் தவறு ஒவ்வொன்றும் ஓர் உயர்ந்த பாடத்தை எனக்குக் கற்பித்திருக்கிறது.
-----
நான் இதுவரை செய்த செயல்கள், எனது எண்ணங்கள் அனைத்தின் பலனே இப்போதைய நான். எனது ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் அவற்றின் பலனைத் தந்திருக்கின்றன. இந்தப் பலன்கள் அனைத்தின் ஒட்டுமொத்தமே என் முன்னேற்றமாக அமைந்தது.
----
வாழ்வின் ஒருமை, அனைத்தின் ஒருமை- இது வேதாந்தத்தின் மற்றுமோர் உயர்ந்த கருத்தாகும். அறியாமைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்.
----
எல்லாமே ஒரே பரம்பொருளின் வேறுபாடுகளே . எல்லாம் ஒன்றே என்ற இந்த ஞானம் பெற்றவனுக்கு மனமயக்கம் இல்லை. எது அவனை மதிமயங்கச் செய்ய முடியும்? அவன் எல்லாவற்றின் ரகசியத்தையும் அறிகிறான், அதன்பின் அவனுக்கு ஏது துன்பம்? அவனுக்கு ஏது ஆசை? எல்லாவற்றின் உண்மை, எல்லாவற்றின் மையம், எல்லாவற்றின் ஒருமை இறைவனே, நிலையான சச்சிதானந்தப் பரம்பொருளே என்பதை அவன் ஆராய்ந்து உணர்ந்துவிட்டான்.
---
🌿 (சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?