ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதங்கள் இந்த நான்கு புத்தகங்கள் தான் வேதமா?

கேள்வி....ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதங்கள் இந்த நான்கு புத்தகங்கள் தான் வேதமா? 
-
சுவாமி வித்யானந்தர்....
-
வேதம் என்றால் அறிவு என்று பொருள்.
-
அறிவு இரண்டு வழிகளில் கிடைக்கிறது. ஒன்று புறஉலகை ஆராய்வது. இரண்டாவது அக உலகை ஆராய்வது. புற உலகை ஆராய்வதால் கிடைக்கும் அறிவு பற்றி நாம் அறிவோம். அது தான் தற்கால விஞ்ஞானஅறிவு. அகஉலக அறிவு என்றால் என்ன?
-
ரிஷிகள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது இந்த உடல் உணர்வை கடந்து செல்கிறார்கள். அப்போது நாம் காணும் சூரியன்,சந்திரன், உட்பட சூரியமண்டலம்,அதை தாண்டியவை எல்லாம் காட்சிகளாக கிடைக்கிறது. பூமி, சூரியனை சுற்றுகிறது. பூமி சூரியனை சுற்ற இந்தனை நாட்கள் ஆகின்றன. மற்ற கிரகங்கள் போன்ற அனைத்துமே அவர்களுக்கு காட்சிகளாக கிடைக்கின்றன. இதிலிருந்து உருவாவது தான் அகவிஞ்ஞானம்.
-
இந்த புறவிஞ்ஞானம் என்பது எவ்வளவு பெரியதோ, அதே போல் மிகவும் பெரியது அகவிஞ்ஞானம். தூரத்தில் நடப்பதை கேட்க வேண்டுமா? முடியும். தூரத்தில் நடப்பதை பார்க்க வேண்டுமா? அதுவும் முடியும். ஆகாயத்தில் பறக்க வேண்டுமா? முடியும். வெட்டுபட்ட உடலின் பாகங்களை மீண்டும் இணைக்க முடியுமா?முடியும். இன்று புறவிஞ்ஞானத்தில் எவையெல்லாம் சாத்தியமோ, அவை அனைத்தும் அகவிஞ்ஞானத்தாலும் சாத்தியம்.
-
இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக அகவிஞ்ஞானம் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்தது. ஆனால் புறவிஞ்ஞானத்தில் நாம் அதிகம் வளரவில்லை. ஐரோப்பியர்கள் அகவிஞ்ஞானத்தில் வளரவில்லை. ஆனால் புறவிஞ்ஞானத்தில் அதிகம் வளர்ச்சியடைந்துள்ளார்கள்.
-
இந்தியாவில் வேதம் என்பது பொதுவாக அகவிஞ்ஞானத்தை பற்றியதாகவே உள்ளது. ஆனால் வேதம் என்பதை அதன் உண்மையான பொருளில் பார்த்தால் எவையெல்லாம் நிலையான அறிவோ,எந்த அறிவு ஒருபோதும் மாறுவதில்லையோ அது மாறாத அறிவு. அது தான் வேதம். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் புறவிஞ்ஞானம், அகவிஞ்ஞானம் இரண்டுமே வேதம் தான். அகவிஞ்ஞானம் மட்டுமே வேதம்,மற்றது வேதம் இல்லை என்று ஒதுக்க முடியாது. ஏனென்றால் புறவிஞ்ஞானத்தின் மூலமும் நிலையான அறிவு கிடைக்கிறது
-
இனி இன்னொரு விசயத்தை ஆராய்வோம்.
-
தகவல் என்ற ஒன்று உண்டு, அறிவு என்ற ஒன்று உண்டு. உங்களுக்கு சூரியமண்டலத்தை பற்றி தெரியுமா? என்று ஒருவர் கேட்டால். தெரியும் நான் அவைகளை பற்றி ஆராய்ந்து அறிந்துள்ளேன் என்று உங்கள் அனுபவத்தை சொன்னால் அது அறிவு. 
எனக்கு சூரியமண்டலத்தை பற்றி தெரியும், ஆனால் இதுவரை பார்த்ததில்லை என்று சொன்னால் அது இன்பர்மேசன்( தகவல்) நீங்கள் சூரியமண்டலத்தை பற்றி படித்திருக்கிறீர்கள். ஆனால் இதுவரை டெலஸ்கோப் மூலமாக நேரடியாக ஆராயவில்லை பார்த்ததில்லை. 
--
ஆகவே தகவல் என்பது, பிறர் சொல்வதை நம்புவது, அல்லது படித்தறிவது. அறிவு என்பது அனுபவத்தை ஆதாரமாக கொண்டது. 
-
இன்று நமது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பல தகவல்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அறிவு ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. இந்த தகவலை அவர்கள் அனுபவத்தில் கொண்டுவரும் போது அறிவு கிடைக்கிறது.
-
இந்த தகவல்களை உரியமுறையில் பின்பற்றினால் அறிவை அடையலாம் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு வேதம். இந்த வேதத்திற்கு அளவே இல்லை. இது எல்லையற்றது. வேதம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. வேதங்கள் என்பது இவ்வளவு தான், இதற்கு மேல் எதுவும் இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. இவைகள் அனைத்தையும் புத்தகத்தில் கொண்டுவர முடியாது.
-
ஆகவே வேதங்கள் என்பவை புத்தகங்கள் அல்ல. அவைகள் இயற்கையின் மாறாத நியதிகள். இந்த நியதிகள் எப்போதும் இருக்கின்றன. மனிதன் அவைகளை கண்டுபிடிக்கிறான்.
-
மேகங்களின் மீது சில ரசாயண பொடிகளை தூவி, மழையை உருவாக்கினால் மழை வருகிறது. இது புறவிஞ்ஞானம்.இதையே ஒரு ரிஷி சில பிரார்த்தனைகள் செய்தால் மழைவருகிறது.இது அகவிஞ்ஞானம்.
-
ரிக்,யஜுர்,சாம,அத்ரவண வேதம் என்பவை அகவிஞ்ஞானத்தை பற்றி சொல்கின்றன.
-
அகவிஞ்ஞானத்தை பற்றி சிறிது ஆராய்வோம்.
-
ஒரு ரிஷி கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்து, முடிவில், இயற்கையின் கட்டுகளிலிருந்து விடுதலை அடைகிறார். சுதந்திரர் ஆகிறார். 
-
அதன் பிறகு இயற்கை அவருக்கு அடிமையாகிறது. அவர் இயற்கைக்கு அடிமையில்லை. சாதாரண மனிதர்கள் இயற்கைக்கு அடிமைகளாக வாழ்கிறார்கள். இயற்கையால் பந்தாடப்படுகிறார்கள். ஆனால் இந்த ரிஷியை இயற்கை கட்டுப்படுத்த முடியாது. 
-
இந்த ரிஷி, பல மாதங்கள் மழையே இல்லாமல் வாழும் பகுதிக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். மக்கள் இவரிடம் தங்கள் குறைகளை சொல்கிறார்கள். இவரும் மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு மழை பெய்ய வேண்டி, இயற்கையிடம் பிரார்த்திக்கிறார். உடனே மழை பொழிகிறது. ரிஷியின் வாயிலிருந்து வெளிப்பட்டதே அந்த பிரார்த்தனை, வேண்டுதல் இது ஒரு வேதம்.
-
இது வேதம் என்பது எப்படி தெரியும்? 
-
யாருடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் ,அவர் விரும்பிய பலனை அப்படியே பலனை தருமோ அது தான் வேதம்.
-
ரிஷியின் சீடர்கள் இந்த பிரார்த்தனையை குறித்துக்கொள்கிறார்கள். அந்த ரிஷி காலமான பிறகு, பல வருடங்கள் கழித்து, சீடர்கள் இதே வார்த்தையை சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனால் மழை பொழியவில்லை. ஏன்? அந்த ரிஷி சொன்ன போது பெய்த மழை இப்போது ஏன் பெய்யவில்லை? ஏனென்றால் ரிஷி, இயற்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 
இந்த சீடர்கள் இயற்கையின் அடிமைகள். அவர்கள் இயற்கையை கடந்து சென்று சுதந்திரர்கள் ஆகவில்லை.
-
அப்படியானால் வேதங்களை உச்சரிப்பதால் பலன் கிடைக்காதா? கிடைக்கும்
-
நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த வேதங்கள் நமக்கு தகவல் போன்றது, இந்த வழியை முறையாக பின்பற்றினால் அவைகள் அறிவை தருகின்றன. ரிஷிகள் தங்களுக்குள் ஆழ்ந்து மூழ்கி உடல் உணர்வை கடந்து சென்றது போல, வேதங்களை ஓதுபவர்கள், உடல் உணர்வை கடந்து செல்ல முடியுமானால்,அவர்கள் பிரார்த்தனைகள் பலன் அளிக்கின்றன.
--
இனி வேதாந்தம் என்றால் என்ன?
-
வேதத்தின் சாரம் வேதாந்தம். நாம் இப்போது பார்த்த அகம்,புறம் இரண்டு அறிவின் மூலமும் பல பலன்களை பெறுகிறோம். ஆனால் இவைகள் மனிதனை சுதந்திரர்கள் ஆக்குமா? முக்தி நிலையை தருமா? வேதத்தின் எந்த பகுதி நமக்கு சுதந்திரத்தை தருவது குறித்து உபதேசிக்கிறதோ, அது தான் வேதாந்தம். வேதத்தில் இந்த உலகத்திலும், மறு உலகத்திலும் சந்தோசமாக வாழ்வது பற்றிய பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அதே போல இந்த இயற்கையிலிருந்து விடுபட்டு முக்தி அடைவது பற்றியும் சொல்கின்றன. முக்தி பற்றிய இந்த கருத்தை போதிக்கும் பகுதிகளே வேதாந்தம். இதையே நாம் இந்துமதம் என்று சொல்கிறோம்.
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6