குல தெய்வம் என்பது என்ன? இந்துமதத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?


கேள்வி...குல தெய்வம் என்பது என்ன? இந்துமதத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
-
சுவாமி வித்யானந்தர்....
-
இந்துமதத்தின் நோக்கம் என்ன? முக்தி. இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவது.
-
ஒரு மனிதனை முக்தியை நோக்கி இட்டு செல்லும் கருத்துக்களை இந்துமதம் ஆதரிக்கிறது. மனிதனை மீண்டும் மீண்டும் கட்டுண்டவனாக மாற்றும் கருத்துக்களை ஆதரிப்பதில்லை. இது அடிப்படை.
-
ஒருவீட்டில் திருமணம் ஆகாத யாரவது இறந்தால் அவர்கள் குல தெய்வமாக பூஜிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக வீட்டில் ஒரு பெண் இறந்துவிட்டால், அந்த பெண்ணிற்கு வீட்டிற்குள்ளோ அல்லது வீட்டை ஒட்டியோ ஒரு அறையை ஒதுக்குவார்கள். அங்கே அந்த பெண்ணின் உடைமைகளை வைத்து பாதுகாப்பார்கள். வருடம் ஒருமுறையோ அல்லது பலமுறையோ, அந்த பெண்ணிற்கு விருப்பமானவற்றை படைப்பார்கள்.
-
ஒரு மனிதன் இறந்த பிறகு முக்தியடையாவிட்டால்,மறுபிறவி எடுக்கிறான் என்பது இந்துமதத்தின் அடிப்படை கருத்து.
-
இறந்த பிறகு உயிர் உடலைவிட்டு பிரிந்து சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் தன்னை குறித்து அழுவதை அது கவனிக்கும். அங்கிருந்து அடுத்து எங்கே செல்வது என்று அதற்கு தெரியாது. ஒரு வேளை வீட்டில் உள்ளவர்கள் இறந்தவர்களை பற்றிய நினைவுகளையும், இறந்தவர்களின் பொருட்களையும் தூக்கி எறிந்துவிட்டால், தன்னை இந்தவீட்டில் உள்ளவர்கள் மறந்துவிட்டார்களே! இனி இங்கு இருக்க வேண்டாம் என்று வேறு இடத்தை தேடி செல்லும். ஒருவேளை அந்தவீட்டில் உள்ளவர்கள் இறந்தவரை பற்றிய நினைத்துக்கொண்டிருந்தால் அந்த ஆவி அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். இறந்தவரை மறந்துவிட்டால்,
அது வீட்டைவிட்டு வெளியேறி தன்னைபோன்ற இறந்தவர்கள் வாழும் இடத்தை அடைகிறது. இந்த வாழ்க்கை நரக வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. அதாவது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் வாழ்க்கை. இவர்கள் மனதில் அன்பு இல்லை.வேதனை மட்டுமே மிஞ்சி நிற்கிறது. மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கமும்,நிறைவேற முடியாத பல ஆசைகளும் நிறைந்திருக்கும். இவர்களால் நாம் காண்பது போல் இந்த உலகை காணமுடியாது. எது நல்லது? எது கெட்டது என்று பகுத்துணரும் மனம் இல்லை. இயல்புணர்ச்சியே மேலோங்கி இருக்கும்.
-
இரவு நேரங்களில் மனித மனம் பலவீனமடைகிறது. இறந்த உயிர்களின் மனம் பகலில் பலவீனமடைகிறது,இரவில் பலமடைகிறது.இரவு நேரங்களில் சில மனிதர்களை துன்புறுத்தவும், அவர்கள் உடலுக்குள் செல்லவும்,அவர்களை கொலை செய்யவும் இந்த உயிர்களால் முடியும்.
-
இப்போது நாம் குல தெய்வம் பற்றிய கருத்திற்கு வருவோம்.
-
திருமணம் ஆகாத ஒருவர் இறந்தால்,அந்த ஆவியை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் குலதெய்வ வழிபாடு, அது வீட்டிற்குள்ளே வாழ்கிறது. அந்த வீட்டில் உள்ள நபர் யாராவது வெளியூர் செல்லும் போது விரும்பினால், அவருடன் செல்லும். தான் வசிக்கும் வீட்டில் உள்ளவர்கள் நலனை மட்டுமே கவனிக்கும். அதுவும் அதன் சக்திக்கு உட்பட்ட படிதான் அதனால் இயங்க முடியும். உதாரணமாக அந்த குல தெய்வங்கள், பிற துஷ்ட பிசாசுகளை வீட்டிற்குள் வர அனுமதிக்காது. கிராமங்களில் பழைய காலத்தில் துஷ்ட ஆவிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதை நிவர்த்தி செய்ய வீட்டிற்கு ஒரு குல தெய்வம் வைத்திருப்பார்கள்.
-
குல தெய்வம் ஆணாக இருந்தால் வீட்டிற்கு வெளியேயும், பெண்ணாக இருந்தால் வீட்டிற்கு உள்ளேயும் தனி அறை ஒதுக்குவார்கள்.
-
ஆனால் சில வேளைகளில் மந்திரவாதிகள் வீட்ற்கு வெளியே உள்ள குலதெய்வத்தை தன்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார்கள். அதை தவறான செயல்களை செய்யும் படி தூண்டுவார்கள். இது தனி சப்ஜெக்ட்...
-
குல தெய்வம் இருப்பது போல, ஊர்காவல் தெய்வமும் இருக்கிறது. ஊர்காவல் தெய்வம் பல வகைப்படும். எல்லைகாவல் தெய்வம், கோவில் காவல் தெய்வம், அணைகள்,குளங்கள் காவல் தெய்வம் என்று காவல் தெய்வங்கள் பல இருக்கின்றன.
-
ஊர் காவல் தெய்வம் என்பது ஏற்கனவே அந்த ஊரில் இறந்த ஒருவர்தான். சுடலை என்றால் சுடுகாடு,மாடன் என்றால் தலைவன் என்று பொருள். பழைய காலத்தில் கிராமங்களில்,அற்ப ஆயுளில் இறப்பவர்கள், இரவு நேரங்களில் வீட்டில் வசிப்பவர்களை துன்புறுத்துவதுண்டு. மக்கள் இரவு நேரங்கள் வெளியே வரவே பயப்படுவாவர்கள். இதை சரி செய்ய சுடுகாட்டில் மாடன்கோவில் இருக்கும். இந்த மாடனின் வேலை, சுடுகாட்டிலிருந்து மற்ற ஆவிகளை ஊருக்குள் செல்வதை தடுக்கிறது.தனது கட்டுப்பாட்டில் இறந்த ஆவிகளை வைத்துக்கொள்ளும். இந்த மாடனும் ஏற்கனவே இந்த ஒருவரின் ஆவி தான். ஆனால் இவர் மக்களை மற்ற ஆவிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். வருடத்தில் ஒருமுறையோ,பல முறையோ இந்த மாடனுக்கு பூஜை செய்வார்கள். இந்த மாடன் குலதெய்வத்தைவிட சக்தி வாய்ந்தது. இருந்தாலும் மந்திரவாதிகள் இவர்களையும் கட்டுப்படுத்திவிடுவார்கள்.
-
மக்களின் நன்மைக்காக அணைகட்டுவார்கள், ஆனால் எதிரி நாட்டை சேர்ந்தவன் அணையை உடைத்துவிடுவான் மறைமுகமாக மக்களை துன்புறுத்துவான்.இதிலிருந்து மக்களை காக்க அணை காவல் தெய்வம்,மற்றும் குளம் காவல் தெய்வம் உள்ளது.
-
பழைய காலத்தில் அணைகட்டி முடிந்தவுடன் திருமணமாகாத சில இளைஞர்களை கொன்று அவர்களை சாமியாக்கி,அவர்களுக்கு அங்கேயே கோவில் கட்டுவார்கள் .இறந்தவர்கள் அந்த அணையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையோ, பல முறையோ பூஜை வைப்பார்கள். இதே போல் கோவில் நகைகளை திருடாமல் இருப்பதற்காக கோவில் காவல் தெய்வம் உள்ளது.
-
பழைய காலத்தில் பெரிய நிலகிழார்கள், அனாதை சிறுவனை எடுத்து வளர்ப்பார்கள், தன்னுடைய மகளை போலவே அவனுக்கு உணவளித்து வளர்ப்பார்கள். தன்னுடைய பல ஏக்கர் பரந்துவிரிந்த நிலத்திற்கு அவ்வப்போது கூட்டிசென்று, இவைகளை நீ தான் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். கடைசியில் ஒரு நாள் அந்த நிலத்தில் வைத்து அவனை கொன்று, அங்கே அவனுக்கு கோவில் கட்டி அவனை காவல் தெய்வமாக்கிவிடுவார். அந்த நிலக்கிழாரிடம் பல ஏக்கர் விளைநிலம் இருக்கும்.அதை எதிரிகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் காப்பதற்கு இவ்வாறு செய்கிறார்.
-
இவ்வாறு பல வழிபாட்டு முறைகளை பற்றி பார்த்தோம். இது தவிர இன்னும் உயர்நிலை வழிபாடுகள் உள்ளன. அது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
-
ஒரு மனிதன் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால், அது நல்லது. அதை வரவேற்கலாம். பின்னோக்கி சென்றால்?. மனிதர்களை மேன்மேலும் முன்னேற்றமடையாமல் தடுக்கும் எந்த வழிபாடுகளாக இருந்தாலும், அவைகள் நல்லதல்ல.குல தெய்வங்களாக வழிபடப்படுபவர்கள், அடுத்த பிறவி எடுத்து முக்தியை நோக்கி சென்றிருக்க வேண்டியவர்கள்.ஆனால் மனிதனின் சுயநலத்தின் காரணமாக அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து,அவர்களை மிருகங்களை போல வேலைவாங்குகிறான். இவ்வாறு வீட்டில் குலதெய்வம் வைத்து வழிபடுபவர்கள் ஒரு விதத்தில் அந்த தெய்வங்களுக்கு துன்பமே செய்கிறார்கள். அவைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, உங்களுக்கு தவறாக தெரியவில்லையா? அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கிறது.அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவர்களை கட்டிப்போடுபவன் அதற்குரிய பாவத்தை அடைகிறான்.
-
இவ்வாறு வழிபடப்படும் குல தெய்வங்கள் பல ஆண்டுகள், இவ்வாறே வாழ்கின்றன. சில நேரங்களில் நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறைவாழ்க்கை வாழ்கிறது.
-
சில தெய்வங்கள் மனிதர்களை துன்புறுத்தி அவர்களை கொலை செய்கிறது. அவைகளுக்கு பாவபுண்ணியம் பற்றிய ஆராய்சி அறிவு இல்லை. இந்த கொடூர குலதெய்வங்களை யார் வழிபட்டுவருகிறார்களோ,அவர்கள் இந்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்.இதனால் அந்த குடும்பமே ஏழ்மை நிலை அடைந்து துன்பப்படுகிறது. இவர்களால் இதிலிருந்து விடுபடவே முடிவதில்லை.அதேபோல் மனிதர்களுக்கு நன்மை செய்யும் தெய்வமும் உள்ளது.
-
முடிவுரைக்கு வருவோம். இந்துமதத்தின் லட்சியம் என்ன? முக்தி. ஒரு மனிதனை முக்தியை நோக்கி இட்டுச்செல்லும் வழிபாடுகளை இந்துமதம் ஆதரிக்கிறது. மற்றவைகளை ஆதரிப்பதில்லை. இந்த பல்வேறு வழிபாடுகள் மனிதனை முக்தியை நோக்கி கொண்டு செல்லுமா? கேள்வியை உங்களிடமே கேட்கிறேன். இந்த வழிபாடுகளை இந்து மதம் எவ்வாறு ஆதரிக்கும்?. பலர் பல காலம் வழிபட்டு வந்தார்கள் என்பதற்காக இந்துமதம் அதை ஆதரிப்பதில்லை. லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள் என்பதற்காகவும் இந்துமதம் அதை ஆதரிப்பதில்லை.
-
இங்கே சுவாமி விவேகானந்தரின் ஒரு செய்தியை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
-
மனிதர்கள் பிறவியிலிருந்தே ஒருவகையான சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், பழங்கால மூடநம்பிக்கைகள், பரம்பரை மூட நம்பிக்கைகள், இன மூட நம்பிக்கைகள், நகர மூட நம்பிக்கைகள், நாட்டு மூட நம்பிக்கைகள், இவற்றைத் தவிர மனிதனுக்குள்ளே இயற்கையாகவே ஊறிக்கிடக்கும் அளவில்லாத மூட நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுபட வேண்டியுள்ளது.
மிகவும் முரணான பல பழக்கவழக்கங்கள் நம்மிடையே நிலவுகின்றன. மதம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தமது சமுதாயத்தில் உள்ளன. இவற்றுக் கெல்லாம் இந்து சாஸ்திரங்களின் சம்மதமும் இல்லை இன்னும் சில பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் உள்ளன; அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கிறோம், பார்க்கவும் வியப்பாக இருக்கிறது. இவற்றிற்கு வேதங்கள் ஸ்மிருதிகள்,புராணங்கள் எவற்றின் சம்மதமும் கிடையாது; இவை வெறும் வட்டார வழக்கங்கள். எனினும் அந்தச் சிறு வழக்கம் கூட அழிந்து போகுமானால், தான் ஓர் இந்துவாக நிலைக்க முடியாது என்றே ஒவ்வொரு பாமர கிராமவாசியும் நினைக்கிறான்.
அவனைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் ஒன்றுதான் அந்தச் சிறிய வட்டார வழக்கமும் ஒன்று தான். அவன் செய்வதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை அவற்றை விட்டுவிட்டால் அவனுக்கு எவ்விதத் தீங்கும்நேரிடாது; மாறாக அவைகளை விட்டுவிட்டால் ஒரு சிறந்த மனிதனாவதற்கே அது துணை செய்யும் .
-----
-சுவாமி விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6