விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -35

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -35
--
காலையில்,கால்போன போக்கில் நடந்தார் உதவிக்காக வீதிகளில் உள்ள கதவை தட்டினார்,கதவை திறந்தவர்கள் கூட வெறுப்புடன் கதவை சாத்தினர்.அப்போது சாலையோரம் சென்று அமர்ந்தார்.
சுவாமிஜி அமர்ந்திருந்த வீட்டில் எதிரிலிருந்து ஒரு பெண்மணி சுவாமிஜியை நோக்கி வந்தார்.அவர் பெயர் மிசஸ் மேரி ஹேல். மிக மென்மையான குரலில் நீங்கள் சர்வமதமகாசபையில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். சுவாமிஜி குழந்தை உள்ளத்துடன் ஆம் என்றார். சுவாமிஜியின் நிலமையை புரிந்துகொண்ட அந்த பெண்மணி அவரை வீட்டிற்கு அழைத்துசென்று உணவு கொடுத்து,தங்க இடமும் கொடுத்தார்.அத்துடன் சர்வமத மகாசபையில் கலந்துகொள்ள உதவியும் செய்தார்.
------
செப்டர்பர் 11, 1893. காலையில் சுவாமி விவேகானந்தர் உட்பட சர்வமதமகாசபை பிரதிநிதிகள் அனைவரும் கொலம்பஸ் ஹாலில் ஒரு பகுதியில் கூடினர். கொலம்பஸ் ஹாலில் நாலாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர்க்கு இடம் கிடைக்காமல் கதவுகளுக்கு அருகிலும் வெளியிலும் கூடியிருந்தார்கள்.
--
இவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது
--
.சர்வமதமகாசபையில் கந்துகொண்ட முக்கியமான 10 மதங்கள் யூதம்,இஸ்லாம்,இந்து,பௌத்தம்,தாவோ,கன்பியூசியம்,ஷின்டோ,ஜொராஷ்டிரியம்,கிறிஸ்தவம்(கிரோக்கசர்ச்,புரோட்டஸ்டன்ட்,.கத்தோலிக்கம்),பிரம்மசமாஜம்.இந்த 10 மதங்களையும் குறிக்கும் விதத்தில் 10முறை லிபர்ட்டி மணி 10 முறை அடித்தது.
---
ஹாலுக்கு அருகே பிரதிநிதிகள் அனைவரும் ஊர்வலமாக வந்தார்கள்.
அனைவரும் அவரவர் இருக்கையில் சென்று அமர்ந்தார்கள். திடீரென பியானோ இசைக்க துவங்கியது.அதில் 4000 பேரும் கடவுளை துதியுங்கள் என்று துவங்கும் கிறிஸ்தவ பாடலை பாடினார்கள்.
---
மேடையில் பேச வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த குறிப்புகளுடன் வந்திருந்தனர்,அதையே வாசித்து காட்டினர்.
ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள், கிரேக்ககிறிஸ்தவம்,புத்தம்,கன்பியூசியம்,பிரம்மசமாஜம், இந்த மதத்தை சார்ந்தவர்கள் காலையில் பேசினார்கள். சுவாமிஜியை பலமுறை பேச அழைத்தார்கள் ஆனால் அவர் பிறகு பேசுவதாக தெரிவித்தார்.அவரிடம் ஒரு பயமும்,தயக்கமும் காணப்பட்டது.
---
நண்பகல் கடந்து மாலை நெருங்கிவிட்டது.இனிமேல் அவர் பேசமாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள்.
அப்போது சுவாமிஜி எழுந்தார்,ஒரு கணம் கலைமகளை மனதில் நினைத்தார்.
--
அமெரிக்க சகோதரிகளே,சகோதரர்களே என்று அழைத்தார்!. அவ்வளவு தான் அவரால் அடுத்த வார்த்தையை பேச முடியவில்லை.அங்கிருந்த அனைவரும் ஏதோவோர் ஆர்வப்பேரலை ஆட்கொண்டதுபோல் தோன்றியது. காதுகளை பிளப்பது போல் கைதட்ட ஆரம்பித்தார்கள்.நூற்றுக்கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை அடக்கமுடியாமல் எழுந்து நின்று கைதட்டினார்கள். சுவாமிஜி பேச முயற்சித்தார் ஆனால் முடியவில்லை, தொடந்து இரண்டு நிமிடங்கள் மக்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
--
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
-
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
-
எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
-
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:
-
எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
-
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’
-
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!
-
அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
---
சுவாமிஜியின் இந்த உரைதான் மிகச்சிறப்பாக இருந்ததாக அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின .ஒரே நாளில் அமெரிக்க முழுவதும் பிரபலம் ஆனார் சுவாமிஜி.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6