விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 29

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 29
---
நாடு முழுவதும் பரிவ்ராஜகராக பயணம் செய்த காலத்தில், கொச்சி (அன்றைய கேரளம்) மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்திற்குப் படகில் சென்றார் சுவாமிஜி. அது டிசம்பர் 1892. சந்துலால், ராமையர் ஆகிய இருவர் அவரை முதன்முதலாகச் சந்தித்தனர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர்கள் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
எர்ணாகுளத்திலுள்ள பலரும் அவரைக் காண வந்தனர். அந்த வேளையில் சட்டம்பி சுவாமிகளும் எர்ணாகுளத்தில் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையும் சாஸ்திர அறிவும் உடையவர் அவர். சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காண வந்த சட்டம்பி சுவாமிகள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு, சற்றுத் தள்ளி நின்றே அவரைத் தரிசித்துவிட்டுச் சென்றார்.
பக்தர்களிடமிருந்து சட்டம்பி சுவாமிகளைப் பற்றி கேள்விப்பட்ட சுவாமிஜி, ‘அவ்வளவு பெரிய மகானான அவர் என்னைத் தேடி வருவதா? நானே செல்கிறேன்’ என்று கூறி அவரைக் காணச் சென்றார்.
சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி தெரியாததால் இருவரும் சம்ஸ்கிருதத்தில் பேசினர். தனிமையில் பேச வேண்டும் என்பதற்காக சுவாமிஜியை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று அங்கே அவருடன் பேசினார் சட்டம்பி சுவாமிகள். பிறகு பேச்சு சின்முத்திரையைப் பற்றி திரும்பியது. ‘சின்முத்திரையின் பொருள் என்ன?’ என்று கேட்டார் சுவாமிஜி. சட்டம்பி சுவாமிகள் தமிழ் நூல்ளை நன்கு கற்றவர். எனவே சின்முத்திரைக்கு அற்புதமான விளக்கம் அளித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து. அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘மிகவும் நல்லது’ என்று இந்தியில் கூறினார்.
சுவாமிஜியின் குரலால் மிகவும் கவரப்பட்டார் சட்டம்பி சுவாமிகள். தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்றது அவரது குரல்! ஓ, என்ன இனிமை!’ என்பார் அவர். சுவாமிஜியின் கண்களையும் வெகுவாகப் புகழ்ந்தார் அவர். சட்டம்பி சுவாமிகளும் அவரது மாணவரான நாராயண குருவும் சவாமிஜியை மிகவும் போற்றிப் பாராட்டினர்.
‘சுவாமிஜி பறவைகளின் அரசனாகிய கருடன் என்றால் நான் வெறும் ஒரு கொசு’ என்றார் சட்டம்பி சுவாமிகள். ஆனால் சுவாமிஜி அசைவ உணவு சாப்பிடுவதை மட்டும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ‘அந்த ஒரு குறை மட்டும் இல்லையென்றால் அவர் ஒரு தெய்வீக மனிதர் தான்’ என்பாராம் சட்டம்பி சுவாமிகள். சுவாமிஜியும் சட்டம்பி சுவாமிகளால் மிகவும் கவரப்பட்டார். ‘நான் ஓர் உண்மையான மனிதரைக் கேரளத்தில் சந்தித்தேன்’ என்று தமது குறிப்பில் எழுதினார் அவர்.
---
திருவனந்தபுரத்தில் பேராசியர் சுந்தரராம ஜயரின் இல்லத்தில் தங்கினார் சுவாமிஜி. சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அறிஞர்களும் மேதைகளும் சாதாரண மனிதர்ககளும் அவரைச் சந்திக்க வந்தனர். அவர் பேசிய ஒவ்வொன்றிலும் ஒரு தனி ஒளி இருந்ததைக் கண்டார் ஜயர். எனவே அவரிடம் ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு சுவாமிஜி தாம் இதுவரை மேடையில் பேசியதில்லை என்றும், அதற்கு முற்பட்டால் பிறரது கேலியும் தோல்வியுமே பலனாக இருக்கும் என்று கூறி மறுத்தார். ஐயர் விடவில்லை. அமெரிக்காவில் நடைபெறப் போகின்ற சர்வமத மகாசபையில் இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி கலந்து கொள்ள வேண்டும் என்று மைசூர் மன்னர் கேட்டுக் கொண்ட விஷயம் ஐயருக்குத் தெரிந்திருந்தது. எனவே அதனைக் கூறி, 'இந்த மேடைக்குத் தயங்குகின்ற நீங்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நேரடியாகப் பதில் கூறாத சுவாமிஜி, 'என்னைத் தமது கருவியாக்கிக் கொள்ள வேண்டும், நான் சில பணிகள் செய்ய வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டார் அதற்கான ஆற்றலையும் அவரே தந்தருள்வார்' என்றார்.

'அப்படி ஒருவனுக்குத் திடீரென்று அவர் ஆற்றலைக் கொடுப்பாரா, கொடுக்க முடியுமா?' என்று சந்தேகத்தை எழுப்பினார் ஐயர். அவ்வளதான், பொங்கி எழுந்தார் சுவாமிஜி. நீங்கள் பெயரளவிற்குத்தான் வைதீகர். உங்கள் தினசரி பூஜை, பாராயணம் அனைத்தும் உள்ளீடற்றவை. இதயத்தில் நம்பிக்கையே இன்றி இதையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள், இல்லாவிட்டார், வாழ்க்கையில் தேவையானவற்றை இறைவனால் கொடுக்க முடியும் என்பதைச் சந்தேகிப்பீர்களா?' என்று இடிபோல் முழங்கினார். 'சம்மட்டிபோல் இறங்கின அவரது சொற்கள்' என்று எழுதுகிறார் ஐயர்.

ஐயரின் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியிலிருந்து வருபவர்களும் சரி சுவாமிஜியைச் சந்திப்பதை ஒரு பேறாகவே கருதினர். ஒவ்வொருவரிடமும் அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து பேசுவது சுவாமிஜிக்குக் கைவந்த கலையாக இருந்தது. இதனால் அவரிடம் பழகுகின்ற ஒவ்வொருவரும் நிறைவு பெற்றனர். ஸ்பென்சர், ஷேக்ஸ்பியர், காளிதாசர், டார்பிவின் பரிணாம வாதம், யூதர் வரலாறு, ஆரிய நாகரீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று அவர் பேசிய துறைகள் ஏராளம். இங்கு தங்கிய சில நாட்களில் சுவாமிஜி சில தமிழ் வார்த்தகளையும் கற்றுக் கொண்டார்.
ராமசுவாமி ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் அவர் பின்னாளில் எத்தகைய பணியைச் செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. தேச பக்கி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமாக ஒரு நம்பிக்கையா? இல்லை. உணர்ச்சியின் எழுச்சியா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேச பக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும் துன்பமும் ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது.

இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். "அவர்களின் தீவினை அது, அதனால் கஷ்டப்படுகிறார்கள்' என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள், கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லட்சோபலட்சம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேச பக்தி'.
இங்கே ஜாதிக்கொடுமையால் மக்கள் படும் துன்பங்களை நேரில் அறிந்துகொண்டார்.தாழ்ந்த ஜாதியினர் கோவிலுக்குள் போக்கூடாது,உயர்ந்த ஜாதியினரில் தெருவிற்குள் போகக்கூடாது,அவர்களைப்பார்க்கக்கூடாது,சாஸ்திரங்கள் படிக்கக்கூடாது.அனைத்திற்கும் உச்சக்கட்டமாக சில ஜாதிப்பெண்கள் திருமணம் செய்யவே கூடாது ,முழங்காலுக்கு கீழே துணி அணியக்கூடாது, மார்பில் துணி அணியக்கூடாது இன்னும் பல வழிகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.இந்தக்கொடுமைகளை கிறிஸ்தவபாதிரிகள் சாதகமாக்கிக்கொண்டார்கள். கூட்டம்கூட்டமாக மக்களை மதம்மாற்றிக்கொண்டிருந்தார்கள்.இந்த நிலையை கண்டு மனம் வேதனைப்படார் பின்னாளில் இதுகுறித்து சீடர்களுக்கு கடிதம் எழுதினார் சுவாமிஜி. திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரச குடும்பத்து பெண்கள் கூட பிராமணர்களில் வைப்பாட்டிகளாக உள்ளார்கள்,ஏறத்தாழ கால்பங்கு மக்கள் கிறிஸ்தவர்களாகிவிட்டார்கள்.தாழ்ந்த ஜாதியிர் நாயைவிட கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று கடிதம் எழுதினார்

ஒன்பது நாட்கள் திருவனந்தபுரத்தில் பழித்துவிட்டு, 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.
----
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6