விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -31

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -31

---
1886 ல் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மறைவுக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் இந்தியாமுழுவதும் பிச்சையேற்று வாழும் துறவியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களை சந்தித்தார்.கடைசியாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.இந்த நாட்களில் அவர் கற்றுக்கொண்டது என்ன?
---
1.பொதுவாக துறவிகள் தங்கள் சொந்த முக்திக்காக உலகத்தை துறந்து செல்கிறார்கள்,ஆனால் பிறருக்கு முக்தியை தருவதற்காக உன்னுடைய முக்தியை தியாகம் செய்ய வேண்டும் என்பதே குருதேவர் இட்ட கட்டளை.2.நான்கரை ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றி வந்தார்,மன்னர்களின் அரண்மனையில் வாழ்ந்தார்,ஏழைகளின் குடிசையில் வாழ்ந்தார்,காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தார்,படித்த பண்டிதர்களுடன் பழகினார்.கடிப்பறிவில்லாத ஏழைகளிடம் பழகினார்.அனைத்து மக்களின் இதயத்துடிப்பை அறிந்துகொண்டார்.3.பல்வேறு சாஸ்திரங்களை கற்றார்,அறிவியியல்,இலக்கியம்,கலை என்று பல துறைகளில் அறிவை கற்றார்,கற்பித்தார்,விவாதம் செய்தார்,பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்.4.மக்களின்ஏற்றத்தாழ்வு,ஜாதி கொடுமை,பெண்களுக்கு எதிரான அடக்குமுறை,ஜமீன்தார்களின் அடக்கு முறை என்று பல கொடுமைகளை நேரில் கண்டார்.5.பிரிட்டிஷ்காரர்களின் அடக்குமுறையால் நாட்டுமக்கள் பட்ட இன்னல்கள் குறித்து மனம்வருந்தினார்,உலகின் செல்ல வளம்மிக்க நாடாக இருந்த இந்தியா,உலகிற்கு கலை,இலக்கியம்,அறிவியல்,ஆன்மீகம் என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்த இந்தியா இன்று பிறரின் காலடியில் பட்டு சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதை கண்டு வேதனையுற்றார்.
---
1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வந்தடைந்தார்.அங்குள்ள கடற்கரைக்கு சென்றார்.அவரது மனம் தவிப்புடன் காணப்பட்டது.இந்தியாவின் பரிதாப நிலைதான் அவரது தவிப்பிற்கு காரணம்.நாட்டிற்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரை வாட்டியது.பிச்சை ஏற்று வாழும் தம்மால் இந்தியாவிற்கு எவ்வாறு உதவ முடியும் என்று எண்ணினார்,அவரது கண்களில் 2 கி.மீ தொலைவில் உள்ள பாறை தென்பட்டது.அங்கு சென்று தவம்புரிய எண்ணினார்,படகில் செல்வதற்காக அங்கிருந்த மீனவர்களிடம் உதவிகேட்டார்,ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்,வேறு வழியின்றி நீந்தியே அங்கு சென்றார்.அவர் கடலில் நீந்தி செல்வதை சிலர் கண்டார்கள்,அவர்களில் சதாசிவம் பிள்ளை என்பவரும் ஒருவர்.
--
சுவாமிஜி அங்குள்ள பாறையில் அமர்ந்தார்,சுற்றிலும் பரந்த கடல்,அரபிக்கடல்,வங்காளவிரிகுடா,இந்துமகா சமுத்திரம் மூன்றும் இங்கே சங்கமிக்கின்றன.அவருக்கு முன்னார் இந்தியா தெரிந்தது.
சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்.மூன்று நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்தார்.அவர் தியானித்தது இந்தியாவை,இந்தியாவின் எதிர்காலத்தை.இந்தியாவில் பண்டைய சிறப்புகளும்,தற்போதைய நிலையும் அவர்மனக்கண் முன் வந்தது.முடிவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரது மனத்தில் ஒரு தீர்வு ஏற்பட்டது.
தியானம் முடிவுற்றது.
--
அவரை பற்றி கேள்விப்பட்டு மக்கள் பலர் கூடினார்கள்.சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன கண்டீர்கள்,எதை குறித்து தியானம் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
சுவாமிஜி கூறினார்,அகத்தளவிலும் புறத்தளவிலும் தான் எதைத்தேடி இத்தனை ஆண்டுகாலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்கு கிடைத்தது என்றார்.
--
சிகாகோவில் 1893 ஜுலையில் உலகக்கண்காட்சியின் ஓர் அங்கமாக சர்வமதமகாசபை ஒன்று நடைபெறப்போகிறது என்ற செய்தி 1892 நடுவில் இந்து நாளிதழில் வெளியாகியது.சபை பற்றிய விபரங்களை தெரிவித்து இந்து மதத்தின் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
--
ஆனால் வெளிநாடு செல்ல யாரும் தயாராக இல்லை.இது குறித்த அந்த இதழின் ஆசிரியர் எழுதிய தலையங்க கட்டுரையில் இவ்வாறு இருந்தது.இந்து மதம் இன்றைய சமுதாயத்தின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.இந்து மதத்தை புனரமைப்பது சாத்தியமே இல்லை.அது உயிரிழந்துவிட்டது.அதன் காலம் முடிந்துவிட்டது.அதன் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுவிட்டது என்றே படித்த மக்கள் கருதினார்கள்.
--
அந்த காலத்தில் இந்துக்கள் கடல் கடந்துசெல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
--
சிகாகோ சர்வமதசபை பற்றிய அந்த மகாசபை அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பரோஸ் சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியராக இருந்த டாக்டர் வில்லியம் மில்லர் என்பவருக்கு கடிதம் எழுதினார்.இந்து மதம் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்கும் படி அதில் குறிப்பிடபட்டிருந்தது.இது குறித்த செய்தி செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்டன.
--
26 வயதில் தனது அறிவால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இணைக்கப்ட்டிருந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் அளசிங்க பெருமாள்.சிகாகோ மாநாடு குறித்து அவரும் அவரது நண்பர்களும் விவாதித்துகொண்டிருந்தார்கள்.அப்போது சுவாமி விவேகானந்தர் சென்னையில் தான் தங்கியிருந்தார்.ஆங்கிலம் பேசும் துறவி ஒருவர் இருப்பதாக அளசிங்கருக்கு தகவல் கிடைத்தது.இளைஞர்கள் பலர் அவரை காண சென்றார்கள்.அவரை காண அளசிங்கர் சென்றார்.அவரது பேச்சுக்கள் அவரை கவர்ந்தன.தாமதிக்காமல் அவரிடம் இந்த கேள்வியை கேட்டார்.”சுவாமிஜி சிகாகோவில் நடைபெறும் சர்வமதமகா சபையில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளக்கூடாது?”சுவாமிஜி உடனடியாக எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை,என்னை யாராவது அனுப்பினால் நான் செல்கிறேன் என்றார்.
--
சென்னை திருவல்லிக்கேணி இலக்கிய சந்கத்தின் மூலம் சொற்பொழிகளுக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.இங்கே தான் சுவாமிஜி சிகாகோ செல்வதற்கு முன்பு பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.அவரை பற்றிய குறிப்புகள் அப்போது உள்ள பத்தரிக்கைகளில் வெளியாயின.
சுவாமிஜியின் பேச்சை கேடபதற்காக பல தமிழ் இளைஞர்கள் ஒன்று கூடினார்கள்.அவரை எப்படியும் சிகாகோ சர்வ மத மகாசபைக்கு அனுப்பிவைப்பது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.அதற்கான பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தார்கள்.ஓரளவு பணம் திரண்டது,சுவாமிஜியிடம் அதை கொடுக்க முன்வந்தபோது சுவாமிஜியின் மனம் பின்வாங்கியது. சிகாகோ செல்வது இறைவனின் திருவுள்ளமா அல்லது தனது மன இச்சையா என பரிதவித்தார்.அந்த பணத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

---
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?