ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-7

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-7

.

கடவுள் ஏன் காப்பாற்றுவதில்லை?

..

கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருபவர்கள், வரும் வழியில் விபத்தில் இறந்துபோகிறார்கள்.

கோவிலில் நெரிசலில் சிக்கி இறந்துபோகிறார்கள், தேர் சரிந்து விழுந்து இயறந்துபோகிறார்கள்.

சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பில் சிலர் இயறந்துபோகிறார்கள்.

இவைகளைப் பற்றியெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இது எல்லா மதத்திலும் உள்ளது.

கடவுளை வழிபடும் இடங்களிலேயே ஏன் மரணம் நிகழவேண்டும்? அவற்றை தடுக்கும் அளவுக்குக்கூட கடவுளுக்கு சக்தி இல்லையா என்றுகூட நினைக்கத்தோன்றும்.கடவுளின் அருள் அவர்கள்மேல் படவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

..

கடவுள் எப்படியும் காப்பாற்றுவார் என்று கடவுளை வணங்கிவிட்டு சில காரியங்களில் ஈடுபடுகிறோம்.ஆனால் கடவுள் காப்பாற்றுவதில்லை. சிலர் கடவுள் தன்னை காப்பாற்றிவிட்டார் என்று கூறுவார்கள்.இது எப்போதாவதுதான் நடக்கிறது.ஆனால் பெரும்பாலான நேரங்களில் கடவுள் காப்பாற்றுவதில்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டி உள்ளது.

..

மிகப்பழைய காலத்தில் ரிஷிகள் பலர் ஒன்று சேர்ந்து காட்டில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வாழ்வார்கள்.

அவர்கள் வாழும் இடத்தை சுற்றி அருமையான அமைதியும் ஆனந்தமும் நிலவும். அங்கே வரும் பயங்கரமான மிருகங்கள்கூட சாந்தமான மனநிலைக்கு வந்துவிடும். மலர்கள் பூத்துக் குலுங்கும். மரங்களில் பழங்கள் காய்த்து தொங்கும். இப்படிப்பட்ட இடங்களை புனிதமான இடங்கள் என்று அழைத்தார்கள்.

குடும்பஸ்தர்கள் வாழ்வின் இறுதி காலத்தில் இவர்களோடு சேர்ந்து வனப்பிரஸ்த வாழ்க்கை வாழ்வார்கள்.

அந்த காலங்களில் கோவில்கள் இல்லை.

ரிஷிகள் வாழும் இடங்கள்தான் புனிதமான இடங்களாக கருதப்பட்டது.

அவர்களோடு சேர்ந்து வாழ்வதே முக்தி அடைவதற்கான வழி என்று கருதப்பட்டது.

இவ்வாறே பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் வாழ்ந்தார்கள்.

..

அதன் பிறகு காடுகளில் வாழும் ரிஷிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

காடுகளில் சென்று வாழும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

ரிஷிகள் வாழ்ந்த இந்த புனிதமான இடங்களுக்கு சென்று சில நாட்கள் தங்கினாலே போதும் முக்தி கிடைத்துவிடும் என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.இவ்வாறு சில நூற்றாண்டுகள் கழிந்தன.

..

அதன் பிறகு புனிதமான இடங்களில் கோவில்கள் கட்டத் தொடங்கினார்கள்.

அந்த இடங்களுக்கு ஒருமுறை சென்று வந்தாலேபோதும் முக்தி கிடைத்துவிடும் என்று மக்கள் நம்பினார்கள்.நல்லவர்கள் மட்டுமே இங்கு வந்துகொண்டிருந்தார்கள்.இப்படி சில நூற்றாண்டுகள் கழிந்தன.

..

பிறகு புனிதமான இடங்களில் தீயவர்களும் வரத்தொடங்கினார்கள்.அந்த இடங்களில் உள்ள புனிதம் மறையத் தொடங்கிவிட்டது. படிப்படியாக புனிதமற்ற சூழ்நிலைகள் வளரத்தொடங்கிவிட்டன.

சுவாமி விவேகானந்தர் இராமநாதபுரம் கோவிலில் நின்று கொண்டு இப்படி பேசினார்.

புனிதமானவர்கள் வருவதாலும் அவர்கள் அங்கே வாழ்வதாலும்தான் கோவில் புனிதமடைகிறது.

அப்படிப்பட்ட புனிதமான இடங்களுக்கு தீயவர்கள் வருவார்களானால் அந்த இடங்களில் உள்ள புனிதம் மறைந்துவிடும். பிறகு அது தீமையின் இருப்பிடமாக மாறிவிடும் என்கிறார்.

இது 130 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது. அப்போது கோவிலுக்குள் சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காலம்.

..

இப்போது எல்லோரும் கோவிலுக்கு செல்கிறார்கள்.தீயவர்களே கோவிலில் அனைத்து பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். அனைத்து புனிதமற்ற செயல்களும் அங்கே நடக்கின்றன.அங்கே கடவுள் எப்படி இருப்பார்?

நல்லவர்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். தீயவர்களின் கூடாரத்தில் கடவுளுக்கு இடம் இல்லை.

இப்போது கோவிலுக்கு செல்பவர்களுக்கு அருள் எப்படி வரும்.

...

நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலம் இது. நாம் நல்லவர்களாக இருந்தால், தர்மசிந்தனை உள்ளவர்களாக இருந்தால் அந்த தர்மம் நம்மைக் காக்கும்.

கடவுள் காக்கிறாரோ இல்லையோ,ஆனால் நாம் செய்த புண்ணிய கர்மம் கண்டிப்பாக நம்மைக் காக்கும். இதுதான் விஞ்ஞான முடிவு. எந்த செயலுக்கும் அழிவில்லை. ஒரு செயல் அதற்கு சமமான இன்னொரு செயலைக் கொண்டுவரும். நாம் ஒருவருக்கு நன்மை செய்தால்,அதற்கு சமமான பலன் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும். நாம் ஒருவருக்கு தீங்கு செய்தால் தெற்கான பலன் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும். இதுதான் விஞ்ஞானம்.

..

இப்போது ஆரம்பித்த இடத்திற்கு வருவோம். ஆதி காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் இருந்த இடம் எப்படி புனிதமான இடங்களாக இருந்தது?

ரிஷிகள் லயம் என்ற ஒன்றை பயிற்சி செய்கிறார்கள். தனது மனத்தை எண்ணங்கள் அற்ற நிலைக்கு கொண்டுவருகிறார்கள். ஆழ்ந்த அமைதிக்குள் புகுகிறார்கள்.அவர்களது அமைதி சுற்றியுள்ள இயற்கையிலும் பிரதிபலிக்கிறது. அந்த இடம் தெய்வீகமான நிலைக்கு வருகிறது.

இந்த இடத்திற்குள் வரும் மனிதர்களின் மனம் தன்னையறியாமலே அமைதிக்குள் இழுக்கப்படுகிறது.

அவர்களது ஆன்மா விழிப்படைகிறது. ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது.

ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றுவதுபோல அங்கே வருபவர்கள் ஆன்மாவின் விழிப்பை உணர்கிறார்கள். இதையே அருள் என்கிறோம்.

அரு(உருவமற்ற) என்ற வார்த்தை ஆன்மாவை குறிக்கிறது. குருவின் அருள் சீடருக்கு கிடைக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

சீடனின் ஆன்மா விழிப்படைந்தது என்று அர்த்தம்.

..

விதிக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன?

.

விதி என்பது என்ன? நாம் ஏற்கனவே செய்த செயலின் பலன்கள்,கடந்த பிறவியில் செய்த பாவம் மற்றும் புண்ணியத்தின் பலன்கள் எல்லாம் சேர்ந்ந்து விதி என்று பெயர்.. இந்த விதியை நம்மால்தான் மாற்ற முடியும்.

முற்பிறவியில் பாவம் செய்தவன் அதற்கான பலனை இந்த பிறவியில் அனுபவித்தால் பழைய பாவம் முடிந்துவிடும்.

இதற்கு இடையில் கடவுளால் குறுக்கிட முடியாது. யார் அதற்கு உள்ளே வருகிறார்களோ அவர்கள் அந்த பாவத்தை ஏற்கவேண்டி வரும்.

ஒரு திருடன் ஒரு மகானை சந்தித்தான். தான் பல காலம் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு பல பாவங்களை செய்திருக்கிறேன்.இப்போது எனது பாவங்களை மன்னியுங்கள் என்று மகானிடம் கேட்டான். மகானால் என்ன செய்ய முடியும்? மகான் இரக்கம் கொண்டார்.

இத்தனை ஆண்டுகள் மகான் வசம் இருந்த புண்ணியத்தை அந்த பாவிக்குக் கொடுத்தார்.திருடனின் பாவம் தீர்ந்து அவன் நல்லவனாகமாறிவிட்டான். திருட்டுத்தொழிலைவிட்டுவிட்டான்.அதேநேரம் திருடன் இந்தனை ஆண்டுகாலம் செய்த பாவம் அந்த மகானிடம் வந்தது. இதன் காரணமாக அவர் தீராத நோய்க்கு ஆட்பட்டார்.

பல ஆண்டு காலம் அந்த நோயால் அவதிப்பட்டு திருடன் செய்த பாவம் முழுவதும் தீர்ந்த பிறகு பழைய படி உடல்நலம் பெற்றார்.

இப்படித்தான் ஒருவரின் பாவத்தை தீர்க்க முடியும். திடீரென்று கடவுளால் மனிதனின் பாவத்தை தீர்த்துவிட முடியாது.

ஆனால் கடவுள் சில தந்திரங்களை கையாள்வார். அவைகளும் சில விதிகளுக்கு உட்பட்டே செய்ய முடியும்.

இதுபற்றி பேசத் தொடங்கினால் பெரிய கட்டுரையாக மாறிவிடும்.

..

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(21-5-2025)

.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6