இறைச்சி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? இது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி



இறைச்சி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? இது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் ஒன்று
-
பொதுவாக தாரண உணவு உண்பவர்கள் தங்களை உயர்வாக கருதிக்கொண்டு,மாமிசம் உண்பவர்களை தாழ்வாக கருதுவது வழக்கம்.அவர்களின் மூளையிலுள்ள அறிவு குறைபாடுதான் அதற்கு காரணம்.அவர்கள் அறிவு இன்னும் முழுமைபெறவில்லை என்பதையே அது காட்டுகிறது.யாரோ மகான் சொன்னார்கள் என்பதற்காக இதை பின்பற்றுகிறார்களே தவிர,சுயமாக அவர்கள் சிந்திப்பதில்லை.
-
ஒரு மனிதன் பிறக்கும்போதே மகானாக பிறப்பதில்லை.ஆசீர்வதிக்கப்பட்ட சிலரை தவிர 99.9 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்போது மிருக இயல்புடன்தான் பிறக்கிறது.வளரவளர அது பண்பட்டவனாக மாறுகிறது.முற்றிலும் பண்பட்டவனாக மாற பல ஆண்டுகள் ஆகும்.சிலருக்கு பல பிறவிகள் ஆகும்.அப்போதுதான் மாமிச உணவு தேவையில்லை என்ற முடிவு எடுக்கிறான்.சிறுவயதில் உள்ளவர்களை மாமிச உணவு உண்ணக்கூடாது என்று தடுத்தால் அவர்களின் இயல்பான வளர்ச்சி தடைசெய்கிறீர்கள்.
-
ஒரு மனிதன் நான்கு ஜாதிகள் வழியாக பயணம் செய்கிறான் என்று ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.சுருக்கமாக கூறுவதாக இருந்தால் பிறரிடம் அடிமைபோல வேலைசெய்து வாழ்பவன் சூத்திரன்.சுயமான தொழில் செய்பவன் வைசியன்,நாட்டை ஆள்பவன் சத்திரின்,ஆராய்ச்சி செய்பவன் பிராமணன்.
-
பிறக்கும்போதே யாரும் பிராமணர்களாக பிறப்பதில்லை.சூத்திரநிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி பிராமண நிலையை அடைகிறார்கள்.அனைவரும் என்றாவது ஒருநாள் பிராமணநிலையை அடையப்போகிறார்கள்.அந்த நிலையை அடைந்தால்தான் முக்தி கிடைக்கும்.
-
சூத்திர நிலையில் இருக்கும் ஒருவனுக்கு மாமிச உணவு அதிகம் தேவை.அவன் உடல் உழைப்பை சார்ந்து வாழ்வதால்,அவனது உடலுக்கு மாமிச உணவு அதிகம்தேவை. அப்படியில்லாவிட்டால் உடல் உழைப்பை முறையாக செய்ய முடியாது.மற்றவர்களின் கேலிப்பேச்சுக்கு ஆழாகவேண்டிவரும்.எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.கிட்டதட்ட அடிமைபோல வாழவேண்டியிருக்கும்.மாமிசம் ரஜோகுணத்தை உருவாக்கும்.அதிக செயல்,அதிக வீரம்,எதிர்க்கும் ஆற்றல் போன்றவை ரஜோ குணத்தின் அடையாளம்.
-
ஒருவீரன் மேல் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு பணிபுரிந்தால் அது உண்மையான பணிவு.ஒரு கோழை மேலதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு பணிபுரிந்தால் அது பணிவு அல்ல,இயலாமை.இயலாமை மனிதனை அழித்துவிடும்.போர்வீரர்கள் பொதுவாக அதிக மாமிசம் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.அது அவர்களிடம் போர் குணத்தை உருவாக்கி எதிரிகளை அழிக்க உதவுகிறது. இந்தியாவில் முன்பு போர்வீரர்கள் மாமிசம் சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.அதனால்தான் முகமதியர்கள் எளிதாக இந்தியாவை வீழ்த்தினார்கள்.
-
இனி  சுயமாக தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு மாமிசம் தேவை.இல்லாவிட்டால் எதிரிகள் இவர்களின் சொத்து,பணம் அனைத்தையும் கொள்ளையடித்து செல்வார்கள்.ஆகவே வைசியநிலையில் இருப்பவர்களுக்கும் ஓரளவு ரஜோகுணம் தேவை.சத்திரிய நிலையில் இருப்பவர்கள்,பலரை ஆளும் பொறுப்பில் இருப்பதால்,அழுத்தமான மனநிலையை அடிக்கடி சந்திக்கவேண்டியிருக்கும் என்பதால் மாமிச உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ரத்த அழுத்தம்,நரம்புநோய்கள்,வயிறு பிரச்சினை,இதய பிரச்சினைகள் ஏற்பட்டடு.மரணம் ஏற்படலாம்
-
கடைசியாக விஞ்ஞானிகள் அல்லது குரு நிலையில் இருப்பவர்கள்.எப்போதும் தியானத்திலும்,ஆழ்ந்த சிந்தனையிலும் ஈடுபட்டிருப்பதால் அவ்வப்போது உடல்உணர்வை கடந்துசென்றுவிடுவார்கள்.அப்போது அவர்களின் இதயம்கூட சிலநொடிகள் நின்றுவிடும்.சிலவேளை மூச்சும் நின்றுவிடும்.அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களால் மாமிசம் சாப்பிட முடியாது.அப்படி சாப்பிட்டால் உடல்நிலை உடனே பாதிக்கப்படும்.இரத்தில் கொழுப்பு சேரக்கூடாது.ஆகவே அவர்கள் அதை ஒதுக்கிவிடுவார்கள்.இறைச்சி,பால்,முட்டை,கேக்,பிஸ்கெட்,பழைய உணவுகள்,மதுபானம்,செரிக்க அதிகநேரமாகும் உணவுகள்,வாயுவை உருவாக்கும் உணவுகள்,பிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட உணவுகள்,இனிப்புகள்,அதிககாரம்,தோல்நீக்கப்படாத காய்கள்,அதிக இனிப்பான பழங்கள்,கொட்டைகள்,நிலத்திற்கு கீழ் விளையும் நிலக்கடலை,கிழங்கு வகைகள் போன்ற  உணவுகளை அவர்களால் உண்ண முடியாது. இன்னும் அவர்களால் உண்ண முடியாத உணவுகளின் பட்டியல் அதிகம் உள்ளது.இவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
-
ஒரு மனிதன் பிராமண நிலைக்கு உயர்ந்தால் தானாகவே அவனது உணவு பழகக்ம் மாறிவிடும்.யாரும் வற்புறுத்த தேவையில்லை.அவ்வாறு பிராமண நிலைக்கு உயர்ந்த ஒருவன் அதற்கு கீழ்நிலையில் உள்ளவர்களை பார்த்து மாமிச உணவுகளை உண்ணக்கூடாது என்று கட்டளையிடக்கூடாது.அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை.அவர் ஒரு மகானாக இருந்தாலும்,வள்ளலாராக இருந்தாலும்கூட அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.
-
சாதாரண ஒரு மனிதனை எடுத்துக்கொள்வோம்.அவன் மாமிசம் உண்ணவில்லை,உடல் பலவீனமாக இருக்கிறான்.ஆன்மீக வாழ்க்கை வாழ்கிறான்.ஒரு கம்பெனியில் கூலிவேலை செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அவனை அவனுடன் வேலை செய்பவர்களே மதிக்கமாட்டார்கள்.தான் பலவீனமாக இருப்பதாக அவனே உணர்வான்.தன்னால் கடினமான வேலைகளை செய்ய முடியாது என்பது அவனுக்கே தெரியும்.அவனது மேலதிகாரிகள் அவனுக்கு முக்கிய பணிகளை ஒதுக்கமாட்டார்கள்.அவனால் மேலதிகாரிகளை எதிர்த்து எந்த கேள்வியும்கேட்க முடியாது. அவ்வப்போது ஆண்டவா! என்னை ஏன் சோதிக்கிறாய்.எப்போது இந்த சம்சார வாழ்விலிருந்து விடுவிப்பாய் என்று பிரார்த்தனை செய்து,அழுதபடியே வாழவேண்டும்
-
அப்படிப்படவர்கள் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிப்பதில்லை.வீட்டிலுள்ள அவரது மனைவி அவனை மதிப்பதில்லை,மகளும்,மகனும் மதிக்கமாட்டார்கள்.சமுதாயத்தில் உள்ளவர்கள் உரிய மரியாதை கொடுக்கமாட்டார்கள்.அவ்வப்போது இறைவா! இறைவா  ! என்று அழுதுகொண்டே நரக வாழ்க்கை வாழவேண்டியதுதான்.
-
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் போர்புரி இந்த வாழ்க்கையை அனுபவி.வீரமரணம் அடைந்தால் சொர்க்கம் இருக்கிறது அங்கே சென்று இன்பத்தை அனுபவி.எப்போதும் பின்வாங்காதே.இதுதான் ஒரு மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும். வீரனுக்குதான் இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.இன்பத்தை அனுபவித்த பிறகு தான் துறவு ஏற்படும்.வீரன்தான் படிப்படியாக வைசிய,சத்திரிய,பிராமணநிலையை அடைய முடியும். கோழைகள் ஒருபோதும் பிராமணநிலையை அடைவதில்லை.அதனால் முக்தி கிடைக்கப்போவதும் இல்லை.பகவான் இரக்கப்பட்டு பாவம் முக்தியை வைத்துக்கொள் என்று பிச்சைபோட்டால்தான் உண்டு.
-
பகவானிடம் ஏன் கெஞ்சி கூத்தாடவேண்டும்? இந்த உலகத்திலிருந்து விடுபடும் வழியை இறைவன் தெளிவாக வகுத்துள்ளார்.படிப்படியாக முன்னேறி அந்த வழியாக சென்று முக்தியடைவதைவிட்டு விட்டு எதற்காக  பகவானிடம் கெஞ்சவேண்டும். அப்படிப்படவர்களை பகவான் விரும்புவதும் இல்லை.இது எப்படி இருக்கிறதென்றால்,வீட்டின் வாசலில் நின்று பிச்சைக்காரன் அம்மா பிச்சை!,அய்யா பிச்சை! என்று தொடர்ந்து கூவிக்கொண்டே இருப்பான்.அவனது தொந்தரவு தாங்க முடியாமல் இகழ்சியுடன்,வெறுப்புடன் பிச்சை இடுவார்கள்.அதேபோல் இருக்கிறது இந்த கோழைகள் பகவானிம் பிரார்த்திப்பது....
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(4-6-2018)
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?