வேதம் பயில்வோம்-பாகம்-4-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-4-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
--
மந்திரம்-3
-
அஸுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா:
தாக்ம் ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: (3)
-
பொருள்
-
3. அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.
-
ஆசை வசப்பட்டு, உடம்புடனும் மனத்துடனும் நம்மைப் பிணைத்துக்கொண்டு, உலகின் சுகபோகங்களை நாடி புற வளர்ச்சியில் கவனம் செலுத்துந்தோறும் நாம் மேன்மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறோம். மாறாக, ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துந்தோறும் இறைநிலையை அடைந்து மரணத்தை வெல்கிறோம். அதாவது பிறவியற்றவர்கள் ஆகிறோம்.
-
இவ்வாறின்றி ஆன்மாவை நினைக்காமல் உடம்பே எல்லாம் என்று வாழ்பவர்களை இது மந்திரம் ஆன்மாவை அழிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆன்மாவை அழிக்க முடியாது; அழிப்பதற்கு நிகரான குற்றத்தைச் செய்பவர்கள் என்பது பொருள். அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு இருண்ட உலகங்களை அடைகிறார்கள். அதாவது தொடர்ந்து பிறவிக்கு உள்ளாகி, துன்பத்தில் உழல்கிறார்கள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அக வளர்ச்சியை நாட வேண்டும், ஆன்மாவைத் தேட வேண்டும்.
-
நாம் யார்?

உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆன்மா என்ற ஐந்தின் தொகுதியே நாம். மனம், பிராணன் மற்றும் புத்தியின் தொகுதி ஜீவன் அல்லது உயிர் எனப்படுகிறது. எங்கும் நிறைந்தவரான இறைவன் நம்மில் ஆன்மாவாக உள்ளார். நம்மில் உள்ள அந்த இறையம்சமே ஆன்மா. அதுவே நமது உண்மை இயல்பு. அந்த ஆன்மாவே நாம் என்பதை உணர்வதுதான் உலகில் இறைவனைக் காண்பதற்கான முதற்படி.
-
ஆன்மாவின் இயல்பு பற்றி பார்ப்போம்
-
மந்திரம்-4

அனேஜ தேகம் மனஸோ ஜவீயோ
நைனத்தேவா ஆப்னுவன் பூர்வமர்ஷத்
தத்தாவதோஸன்யானத்யேதி திஷ்ட்டத்
தஸ்மின்னபோ மாதரிச்வா ததாதி (4)

4. ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது, மனத்தை
விட விரைவானது. புலன்கள் அதனை அடைய
இயலாது. அது நிலையாக நின்றபடியே அனைத்
திற்கும் முன்னால் செல்கிறது; ஓடுகின்ற அனைத்தை
யும் முந்துகிறது. அது நிலையாக இருப்பதால்
பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.
-
ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம் வேண்டும். எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது.
-
மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைவுக்கும் போது, அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன. இதுவரை விஞ்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது. அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா அதாவது இறைவன் உள்ளார். எனவே தான் மனத்தைவிட விரைவானது, நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.
-
புலன்களால் ஆன்மாவை அறிய இயலாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வல்லது. தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமே பார்க்க முடியும்; அருகில் உள்ளவற்றைப் பார்க்க இயலாது. நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காண முடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை. அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் இயலாது. இதையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று அர்ஜுனனிடம் கூறுகிறார்.
-
எந்த ஓர் இயக்கமும் நடைபெற வேண்டுமானால் இயங்காத ஒன்று அதற்கு ஆதாரமாக வேண்டும். ரயில் ஓட வேண்டுமானால் அசையாத தண்டவாளம் வேண்டும். திரைப்படம் இயங்க வேண்டுமானால் அசைவற்ற திரை ஆதாரமாக வேண்டும். அவ்வாறே, இந்த உலகின் இயக்கங்கள் அனைத்திற்கும் காரணமாகவே உள்ளது பிராணன். அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா.
-
மந்திரம்-5
-
ததேஜதி தன்னைஜதி தத்தூரே தத்வந்திகே
தத்ந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத: (5)
-
பொருள்
-
5. அது அசைகிறது,  அது அசைவதில்லை. அது தூரத்தில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது.
-
ஆன்மா, கடவுள் போன்ற உண்மைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிவினால் புரிந்துகொள்ள முடியாது என்றே வேதங்கள், உபநிஷதங்கள் முதலான அனைத்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு புலன்களும் எட்டாத ஒன்றைப் புலன்களால் விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. ஆன்மா எங்கும் நிறைந்ததாக இருப்பதால் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சாத்தியமாகின்றன.
-
பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆன்மா (4) எனவே ஆன்மா அசைகிறது. ஆன்மா என்ற நிலையில், அதாவது எங்கும் நிறைந்த நிலையில் அதற்கு அசைவில்லை.
-
நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது. எனவே அது மிக அருகில் உள்ளது. ஆனால் நாம் அதை உணராத நிலையில் அது மிகவும் தூரத்தில் உள்ளது.
-
அதுபோலவே இறைவன் என்ற நிலையில் அது எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அனைத்தின் உள்ளேயும் உள்ளது, வெளியேயும் உள்ளது.
-
மந்திரம்-6
-
யஸ்து ஸர்வாணி பூதான்யாத்மன்யேவானுபச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே (6)
-
6. யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும்,
ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ
அவன் யாரையும் வெறுப்பதில்லை.
-
எல்லா உயிர்களிலும் ஆன்மாகிய நானே இருக்கிறேன் என்று உணர்பவன் யாரையும் வெறுபப்தில்லை.உயிர்களை வெறுப்பது என்பது என்னை வெறுப்பதாகும்.உயிர்களை நேசிப்பது என்பது என்னை நேசிப்பதாகும்
-
ஆன்மாவாகத் தன்னை உணர்ந்தவன்,அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.
-
மந்திரம்-7
-
யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:
தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபச்யத: (7)
-
பொருள்
-
7. ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்? என்ன கவலை?
-
பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம். ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது. விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது. ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று 6-7 மந்திரங்கள் கூறுகின்றன.
-
ஆன்ம அனுபூதி, இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக அனுபவம், உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல. அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கிறோம். சுற்றியிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடமே நிகழ்ந்தது- நமது உணர்வு விரிந்தது.
-
ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டுவிடுகிறது. இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அறுதி மாற்றம் அது. இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது. பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது; அவர்கள் எங்கும் தன்னையே, தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை. எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் உண்மையில் எனது என்று எதுவும் இல்லை. எனவே, மிதிலை நகரமே பற்றியெரிந்தால்கூட நான் எøதாயும் இழப்பதில்லை (1. அனந்தம் பத மே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சனமதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே கிஞ்சித் ப்ரதஹ்யதே    -மகாபாரதம், சாந்தி பர்வம், 17.18.)என்று மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது. ஆன்ம அனுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்- துக்கம், வெற்றி- தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளைக் கடந்துவிடுகிறார்கள்; வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?