வேதம் பயில்வோம்-பாகம்-3-யஜுர்வேதம்


வேதம் பயில்வோம்-பாகம்-3-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
--
நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது. அதனால்தான் உபநிஷத ரிஷி, இறைவா! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய-அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்று பிரார்த்தனை செய்கிறார்.
-
அத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக, ஜபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது. நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.
-
ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி உண்மை என்பது அனைத்தையும் கடந்தது; இருள்- ஒளி, துன்பம்-இன்பம், தீமை- நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது. எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிரார்த்திக்கிறார்.
-
ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?
-
ஒளிக்கு அப்பால் தம்மையே காண்பதற்காக உபநிஷத முனிவர் கூறுகிறார். அறுதிநிலை அனுபூதி இது. இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.
-
அறுதி உண்மையான பரம்பொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும். அதற்கு வாழ்க்கையையே வழியாக இந்த உபநிஷதம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதல்ல; வாழ வேண்டிய முறையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் அதுவே ஓர் ஆன்மீக சாதனையாகி விடுகிறது; ஒளியை அடைவதற்கான, இறையனுபூதிக்கான ஒரு வழியாகிவிடுகிறது. உரிய முறையில் வாழ்வது என்பதை இரண்டு படிகளாக முதல் இரண்டு மந்திரங்கள் கூறுகின்றன.
-
தியாகத்துடன் அனுபவி:
-
மந்திரம்-1
-
ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் (1)

பொருள்-
-
1. மாறுகின்ற இயல்புடைய இந்த உலகில் உள்ள
அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும்.
அத்தகைய தியாக சிந்தனையுடன் உலகை அனுபவி.
பணம் யாருடையது? அதற்காக(பணத்திற்காகவும் உலகியல் விசயங்களுக்காகவும்) ஆசைப்படாதே.
-
உலகமும், அதன் செல்வங்களும், அது தரும் சுகபோகங்களும் எல்லாம் மாறுபவை. அதாவது நிலையற்றவை. நிலையான இன்பம், அமைதி எதையும் இந்த உலகிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நிலைத்த இன்பத்தையும் அமைதியையும்தான் நாம் ஒவ்வொரு வரும் தேடுகிறோம். அதனைப் பெற என்ன வழி?
-
அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும். இதன் பொருள் என்ன? விளக்குகிறார் சுவாமி விவேகாந்தர்:
-
அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும்; ஒருவகை போலியான இன்ப நோக்காகவோ, இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. <உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்.... இதன் பொருள் என்ன? நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும்..
-
. உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள்.
-
நாம் நமது கற்பணையால், நமது அனுமானத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவரில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.
-
எங்கும் இருப்பவர் அவர். எல்லாம் அவருடையது; வேறு யாருடையதும் அல்ல. எனவே நமக்கென்று வாய்த்த செல்வத்திலும் ஆசை கொள்ளாமல் அனைத்தும் இறைவனுக்கு உரியவை என்ற தியாக சிந்தையுடன் உலகை அனுபவிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது முதற்படி.
-
தியாகத்தால் பற்றின்மை வருகிறது.எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது.
-
மந்திரம்-2
-
குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதக்ம் ஸமா:
ஏவம் த்வயி நான்யதேதோஸஸ்தி ந கர்ம லிப்யதே நரே (2)

பொருள்
-
2. கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டுகள்
வாழ விரும்பு. (உலகை அனுபவித்து வாழ விரும்பு
கின்ற) உன்னைப் போன்றவர்களுக்கு இதைத்தவிர
வேறு வழி இல்லை. (இவ்வாறு வாழ்வதால்)
கடமைகள் உன்னைப் பற்றுவதில்லை.
-
உலகில் வாழ வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும். கடமைகளைச் செய்யாமல் யாரும் வாழ முடியாது. எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு விளைவு ஒன்று இருக்கும். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், இரண்டும் கலந்ததாக இருக்கலாம்; ஆனால் விளைவு ஒன்று இருந்தே தீரும். விளைவு எதுவானாலும் அது நம்மைப் பிணைக்கிறது; மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அந்தப் பதிவு, நாம் மேலும் அந்தச் செயலைச் செய்யுமாறு தூண்டுகிறது. மீண்டும் நாம் அந்த வேலையைச் செய்கிறோம். இவ்வாறு வேலைகள் தொடர்கின்றன. இது, தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது.
-
ஆனால் உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அவரது சொத்திற்கும் சுகத்திற்கும் ஒரு பொறுப்பாளனைப் போல் வாழ்ந்தால், அந்த ரீதியில் வேலை செய்தால் அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காதலால் அத்தகைய வேலை அக வளர்ச்சிக்கான ஓர் ஆன்மீக சாதனையாக ஆகிவிடுகிறது
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?