Sunday, 8 June 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-16

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-16

.

முக்தி பெற வீட்டைத் துறக்க வேண்டுமா?

..

ஒருவர் முக்தியடைய வேண்டுமானால் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை முயற்சிக்க வேண்டும். ஒன்று சக்தியை இழக்கும் வழி. இன்னொன்று சக்தியை ஏற்கும் வழி. சக்தியை இழக்கும் வழியில் தன்னிடம் உள்ள எல்லா சக்தியையும் இழக்க வேண்டும். அதற்கு உலகத்தை துறந்து பிச்சை ஏற்று வாழும் வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

..

பழைய காலத்தில் காசியில் சென்று வாழ்ந்தால் முக்தி என்று சொல்வார்கள்.பிறகு காசியில் இறந்தாலே முக்தி என்ற சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பழைய காலத்தில் அறுபது வயதை கடந்த ஒருவர் குடும்பப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துவிட்டு காசியில் சென்று வாழ ஆரம்பிப்பார்.காசியில் எங்கும் ஞானம் பற்றிய பேச்சுதான் நடந்துகொண்டிருக்கும்.அதை தொடர்ந்துகேட்டுக் கொண்டிருப்பார்கள். சுமார் பத்து,இருபது ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே வாழ்வார்கள். காசியைவிட்டு நீங்கி வேறு எங்கேயும் செல்லமாட்டார்கள்.

காசியில் தங்குவதற்கு எந்த ஏற்பாடும் இருக்காது. மழையோ,வெயிலோ,குளிரோ அனைத்தும் உடலை பாதிக்கவே செய்யும்.இதனால் வரும் துன்பங்களை அனுபவிக்கும்போது பாவம் தொலைகிறது.

அதோடு எந்த மரியாதையும் இருக்காது. யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு பிச்சையாக கிடைக்கும். ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இல்லாத நிலை. இந்த நிலையில் வாழும்போது அகங்காரம் அகல்கிறது. நான் உடல்,நான் மனம், நான் இப்படிப்பட்ட அந்தஸ்து உடையவன் என்ற நிலை மறைகிறது.

1.அனைத்தையும் துறத்தல் 2.ஆணவத்தை அகற்றுதல் 3.பாவத்தை தொலைத்தல் இந்த மூன்றும் காசியில் தொடர்ந்து தங்குவதால் நிகழ்கிறது.

இவ்வாறு பல ஆண்டுகள் காசியில் தங்கியபிறகு மனிதனிடம் சேர்ந்துள்ள சக்தி, அதாவது ஆத்மாவை மறைத்துள்ள சக்தி அவனை விட்டு அகல்கிறது. ஆன்மா தனது சொந்த இயல்பில் நிலைபெறுகிறது.

இது சக்தியை இழக்கும் வழி.

..

காசியில் சென்று வாழ்ந்தால்தான் இந்த நிலையை அடைய முடியுமா? வீட்டில் வாழ்ந்தால் அடைய முடியாதா?

வீட்டையே காசியாக மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வீட்டிலிருந்தே முக்தி அடைய முடியுமா?.

ஆனால் அது நல்லதா? வீட்டில் வாழ்ந்தால் வீட்டில் உள்ளவர்களும் வறிய நிலைய அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏனென்றால் இந்த வழி சக்தியை இழக்கும் வழி. சக்தியை இழப்பது என்பது தரித்திர வழி. எல்லாமே தன்னைவிட்டு அகன்றுவிடும். வீட்டில் தங்கியிருந்தால் அந்த தரித்திரம் வீட்டில் உள்ளவர்களையும் பற்றும்.

வீட்டில் செல்வம் தங்காது. வீட்டில் உள்ளவர்கள் நோய்களால் துன்பப்பட நேரும்.

..

இதனால்தான் பழைய காலத்தில் முக்தி அடைய விரும்புபவர்கள் வீட்டைத்துறக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறுகிறார்கள்.

..

அப்படியென்றால் இல்லறத்தில் இருந்துகொண்டே முக்தி அடைய முடியும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்களே அது எப்படி?

..

அதுதான் சக்தியை சேர்க்கும் வழி.

இந்த வழியில் இருக்கும் இல்லறத்தார் ஒருவர், தொடர்ந்து பற்றில்லாமல் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.இதனால் அதிக அளவு புண்ணியம் கிடைக்கிறது.

அடுத்து ஞானம் மிகவும் முக்கியம் நான் சிறிய உடல் அல்ல. நானே பிரபஞ்சம். இந்த பிரபஞ்சமே எனது உடல் என்று நினைக்க வேண்டும்.

பிறரிடமிருந்துவரும் துன்பங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சக்தி பெருகுகிறது. தீயவன் நல்லவனை துன்புறுத்தினால் தீயவனிடமுள்ள சக்தி நல்லவனிடம் வருகிறது. இந்த வழியில் செல்பவர்கள் அதிக எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். பலர் வேண்டுமென்றே தொந்தரவு தருவார்கள். பல்வேறு சூழ்ச்சிகள் செய்வார்கள்.

பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அனைத்தையும் கடக்க முடிந்தால் அவர்களிடமுள்ள சக்தி நமக்கு வரும். இதனால் சக்தியில் அளவை விரிவுபடுத்த முடியும். எந்த அளவுக்கு சக்தி தேவை என்றால், பிரபஞ்ச அளவுக்கு சக்தி தேவை. என்னால் எதையும் செய்ய முடியும். சூரியர்களை உதிக்காமல் செய்ய முடியும், பூமியை சுற்றாமல் செய்ய முடியும், காற்றை நிறுத்த முடியும், இயற்கை சக்தியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்ற அளவுக்கு சக்தி தேவை. இதையும் தாண்டி சக்தி தேவை. கடவுளிடம் எந்த அளவுக்கு சக்தி உள்ளதோ அந்த அளவுக்கு சக்தி தேவை.

இந்த நிலையை அடைந்துவிட்டால் ”நான் கடவுள் என்ற நிலை கிடைத்துவிடும்.

.

இந்த சிறிய உடல் எனது பிரபஞ்ச உடலின் ஒரு பகுதி. இந்த உடலிலன் மனம் எனது பிரபஞ்ச உடலின் ஒரு பகுதி. இவ்வாறு எப்போதும் தியானிக்க வேண்டும். இப்படி செய்தால் நான் இந்த உடல் என்ற எண்ணம் மறையும். இவ்வாறு அகங்காரத்தை விரிவுபடுத்தவேண்டும். அகங்காரத்தில் அளவை எல்லையற்றதாக்க வேண்டும். நீயும் நானும் ஒன்று. எல்லா மனிதர்களும் நானும் ஒன்று. எல்லா விலங்குகளும் நானும் ஒன்று. நானே எல்லாம். இந்த அளவுக்கு அகங்காரத்தை விரிவுபடுத்த வேண்டும்.

.

அடுத்ததாக இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் நன்மை செய்வதற்காக பாடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உடல்,மனம்,பிராணன் எல்லாவற்றையும் பிறர் நன்மைக்காக இழக்கவும் தயாராக இருக்க வேண்டும்.இதனால்

மிகப்பெரிய அளவு புண்ணியம் கிடைக்கும். பிரபஞ்சம் உள்ளவரை மனிதர்கள் அந்த செயலை நினைவுகூர்ந்தடியே இருப்பார்கள். அப்படிப்பட்ட மிகப்பெரிய தியாகத்தை செய்ய வேண்டும்.

.

 இதில் மூன்று முக்கிய விசயங்கள் கவனிக்க வேண்டும்

1.அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுதல் 2. அகங்காரத்தை விரிவுபடுத்துதல் 3.புண்ணியத்தைப் பெறுதல்

..

வீட்டில் இருந்தபடியே முக்தியை அடைய நினைப்பவர்கள் இந்த வழியை பின்பற்ற வேண்டும்.

இந்த வழி புண்ணியத்தின் வழி. இதனால் வீட்டில் அமைதியான நிலை ஏற்படும். ஊருக்கு நல்லது நடக்கும். நாட்டிற்கும் நல்லது நடக்கும்.

..

ஒருவேளை இந்த வழியில் செல்லும் ஒருவர். இந்த முயற்சியில் வெற்றி பெறாமலே இறந்துவிட்டால் என்ன செய்வது?

கவலையில்லை. அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்தே தொடங்கலாம். முற்பிறவியில் செய்ய புண்ணியத்தின் பலனால் இனிவரும் பிறவி நல்லதாகவே அமையும்.

..

சக்தியைப்பெறும் இந்த வழியில் முக்தி பெற ஒரு பிறவி போதாது. பல பிறவிகள் தேவைப்படும்.

யாரை நாம் ரிஷி என்றும் முனிவர் என்றும் அழைக்கிறோமோ அவர்கள்தான் இந்த வழியில் சென்று முக்தி பெற்றுள்ளார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு சிலரே இந்த வழயில் சென்று முக்தி பெறுகிறார்கள்.

இருந்தாலும் அதற்கான மனம் தளரவேண்டாம். முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த பிறவியில் முடியாவிட்டால்.இன்னொரு பிறவி, அதிலும் முடியாவிட்டால் இன்னொரு பிறவி .கண்டிப்பாக ஏதாவது ஒரு பிறவியில் இது சாத்தியப்படும்.

..

பல பிறவிகளில் காத்திருந்து முக்தியை அடைவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த பிறவியிலேயே முக்தியை அடைய வேண்டும் என்றால் சக்தியை இழக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு வீட்டை துறந்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் உள்ளவர்களும் துன்பப்படநேரும். எப்படியும் ஒருநாள் அவர்களாகவே வீட்டைவிட்டு துரத்திவிடுவார்கள்.

அந்த அளவுக்கு போவதற்கு முன்பாகவே காசியோ,பிருந்தாவனமோ அல்லது திருவண்ணாமலையோ எங்காவது ஒரு இடத்தில் தங்கி வாழலாம். சாப்பாட்டிற்கு குறை இல்லை. ஆனால் தங்குவதற்கு இடம் கிடைக்காது. ஒரு நாய்கூட நம்மைவிட நன்றாக வாழ்கிறதே என்று தோன்றும்.

ஒருமுறை நான் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது ஒரு சாது ஒரு தெரு நாயைப் பார்த்து என்னிடம் கூறினார். இந்த நாய்க்கு வந்த வாழ்வைப் பாருங்கள். வேளை வேளைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. தங்குவதற்கு இடம் கிடைக்கிறது. நம்மைவிட எவ்வளவோ வசதியாக அது வாழ்கிறது என்றார்.

ஒரு தெரு நாய் வாழும் வாழ்வைவிட பிச்சை ஏற்று வாழும் வாழ்க்கை சற்று கடினமானதுதான்.

..

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(8-6-2025)

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...