Sunday, 8 June 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-12

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-12

..

தொலைநோக்கி மூலம் காலத்தை சுருக்குகிறோம்.

..

காலம் என்பது நாம் தெரிந்துகொள்ளவேண்டிய,இதுவரை சரியாக புரிந்துகொள்ளப்படாத ஒன்று.

புராணத்தில் ஒரு கதை வரும். கிருஷ்ணரும்,நாரதரும் ஒரு பாலைவனம் வழியாக பயணம் செய்தார்கள். அப்போது கிருஷ்ணருக்கு தாகம் எடுத்தது.எங்காவது சென்று தண்ணீர் வாங்கி வரும்படி நாரதரை அனுப்புவார். நாரதர் பல இடங்களில் அலைந்து,தூரத்தில் ஒரு வீட்டைப்ப பார்ப்பார்.அங்கே சென்றதும் அந்த வீட்டில் உள்ள ஒரு இளம் பெண்ணைப்பார்த்து மயங்கி தான் எதற்காக இங்கே வந்தோம் என்பதையே மறந்துவிடுவார். பின்பு அந்தப்பெண்ணை திருமணம் செய்து,அவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்த பிறகு ஒருநாள் பெரிய மழைவெள்ளம் வந்து மனைவியையும் குழந்தைகளையும் அடித்து சென்றுவிடும். அப்போது நாரதர் மட்டும் தனியாக அழுதுகொண்டிருப்பார். அப்போது கிருஷ்ணர் அருகில் வந்து தண்ணீர் கேட்டு அரைமணிநேரம் ஆகிறது, இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

என்பார். அப்போதுதான் நாரதருக்கு பழைய நியாபகம் வரும்.எனது வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு கனவுபோல் கழிந்துவிட்டதே! நீங்கள் அரை மணிநேரம் ஆகிவிட்டதாக கூறுகிறீர்களே என்று கிருஷ்ணரைக்கேட்பார்.

நீ இவ்வளவுநேரமும் காலம் என்ற மாயை வலையில் சிக்கிக்கொண்டிருந்தாய். எல்லோரும் இதேபோல காலனின் மாய வலையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம். எது உண்மை எது பொய் என்றே தெரியாது என்று கூறுவார்.

..

இந்த கதை காலம் பற்றிய கருத்தை சொல்வதற்காக எழுதப்பட்டிருக்கலாம்.

நாம் தொலைநோக்கி மூலம் தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். அப்படி பார்க்கும்போது காலத்தை சுருக்குகிறோம். அதாவது கடந்த காலத்திற்குள் செல்கிறோம். அதேபோல நுண்ணோக்கி மூலம் ஒரு அணுவை ஆராயும்போது எதிர்காலத்திற்குள் செல்கிறோம்.

..

இது விளக்குவதற்கு ஒரு ஊதாரணத்தைக் கூறுகிறேன்.திருவாதிரை நட்சத்திரம் நமது சூரியனைவிட சுமார் 800 மடங்கு பெரியது. அந்த நட்சத்திரம் இன்னும் சில லட்சம் ஆண்டுகளில் வெடித்துவிடும் என்று சொல்கிறார்கள்.

அப்படி அது வெடித்தால்,அந்த நிகழ்வை நாம் பூமியிலிருந்தே சாதாரண கண்களால் அதை பார்க்கலாமாம், ஒரு நிலா அழவுக்கு அது பெரிதாகி பிறகு வெடிக்குமாம்.ஆனால் திருவாதிரை நட்சத்திரம் வெடித்து 724 ஆண்டுகள் கழித்த பிறகு தான் பூமியில் உள்ளவர்களின் கண்களுக்கு அது தெரியும். ஆனால் தொலை நோக்கி வைத்திருப்பவர்கள் திருவாதிரை நட்சத்திரம் வெடிக்கும் நேரத்திலேயே பார்க்கலாம்.

..

இப்போது இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கிறோம் ஒன்று. அந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் உடனே பார்த்தல்.இன்னொன்று 724 ஆண்டுகள் கழித்து சாதாரண கண்களால் பார்த்தல்.

ஒரே நிகழ்வுதான் ஆனால் காலம் வேறுபடுகிறது.

.

ஒளியாண்டு என்பது விண்வெளியில் தூரத்தைக் கணக்கிடும் ஒரு நடைமுறை. விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இது மாறாதது. இந்த வேகத்தில் ஓராண்டு பயணம் செய்தால் ஒளி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுதான் ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். இதன்படி பார்த்தால் 724 ஆண்டுகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சென்று சேரும் தூரத்தில் இருக்கிறது திருவாதிரை.

..

தொலைநோக்கி மூலம் ஒருவன் பார்த்தானே அவன்  724 ஒளிஆண்டுகள் பயணம் செய்து அங்கே நடப்பதைப் பார்த்தான்.உண்மையில் அவன் பயணிக்கவில்லை,அந்த தொலைநோக்கியின் உதவியால் அதைப்பார்த்தான்.

தொலைநோக்கி 724 ஒளிஆண்டுகள் காலத்தை ஒரே நொடியில் சுருக்கி நமக்கு காட்டிவிட்டது.

..

காலத்தை சுருக்கும் ஒரு கருவி தொலைநோக்கி. இதை இன்னும் விரிவாக பார்த்தோமானால் இந்த பிரபஞ்சத்தில் முன்பு நடந்த எந்த நிகழ்வையும் நம்மால் காணமுடியும். உதாரணமாக 1000 ஒளியாண்டுகளுக்கு முன்பு இரண்டு நட்சத்திரங்கள் மோதிக்கொண்டன என்று வைத்துக்கொள்வோம். இதை இன்று பார்க்கவேண்டும் எப்படிப்பார்ப்பது?

1000 ஒளியாண்டுகளுக்கு முன்பு இரண்டும் மோதிக்கொண்டபோது வெளியான ஒளி இந்த பிரபஞ்சத்தில் இன்னும் பயணம் செய்துகொண்டேதான் இருக்கும். அது அழியாது. அந்த ஒளியை ஏதாவது கருவி மூலம் கிரகிக்க முடிந்தால் அந்த நிகழ்வை இன்றும் பார்க்கலாம்.

..

இது காலத்தின் ஒரு பரிமாணம். காலத்தை முன்னோக்கியும் கொண்டு செல்லலாம், பின்னோக்கியும் கொண்டு செல்லலாம். காலம் முன்னோக்கி மட்டுமே செல்லும் பின்னோக்கி செல்லாது என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் காலம் என்பது ஒரு வட்டம்போல உள்ளது. ஏற்கனவே நடந்த நிகழ்சிகள்தான் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டிருக்கின்றன. நம்முடைய சிறு புத்திக்கு அவை புரிவதில்லை. இன்று நம் பூமியில் நடந்துகொண்டிருக்கும் இதே நிகழ்வுகள் பலகோடி ஒளி ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடக்கும். எப்படிப்பார்த்தாலும் இது முன்னோக்கி மட்டுமேதானே செல்கிறது என்று சொல்லலாம். வட்டத்தில் முன்னோக்கி என்பது இல்லை. நாம் முன்னோக்கி செல்கிறோம். ரிஷிகளால் பின்னோக்கியும் செல்ல முடியும்.

..

இதுபற்றிய ஒரு புராணக்கதை உள்ளது. ஒருமுறை ஆஜ்சனேயர் ஒரு காட்டின் வழியாக ராமருடன் பயணம் செய்து கொண்டிருப்பார். அப்போது அந்த காட்டில் ஒரு பானை இருக்கும். அந்த பானையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பார் ஆஜ்சனேயர். அங்கே சீதை அசோக வனத்தில் தன்னிடம் கொடுத்த மோதிரம் இருக்கும். இன்னும் கவனமாக பார்ப்பார் அதுபோல பல மோதிரங்கள் அங்கே கிடக்கும். இது என்ன? சீதையின் மோதிரம் இங்கே எப்படி?அதுவும் ஒரேபோல பல மோதிரங்கள் உள்ளனவே என்று ஆஜ்சனேயர் கேட்பார். அதற்கு ராமர் கூறுவார். ஆஜ்சனேயா ராமயண நிகழ்வு என்பது ஒருமுறைதான் நடந்தது என்று நினைக்காதே, அது மீண்டும் மீண்டும் பல முறை நடந்துள்ளது. பலமுறை இராணவன் பிறந்துள்ளான்.பல முறை சீதையை கடத்திச்சென்றிருக்கிறான். பலமுறை நான் அவைனைக்கொன்றிருக்கிறேன். இந்த நிகழ்வு இன்னும் பல முறைநடக்க உள்ளது. ஏற்கனவே பலமுறை சீதையின் மோதிரத்தை நீ வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய். அவைகள்தான் அங்கே பாத்திரத்தில் கிடக்கின்றன என்று கூறுவார்.

..

காலம் எப்படிப்பட்டது என்பதை விளக்குவதாக அந்த கதை உள்ளது.

..

இனி நுண்ணோக்கி பற்றி பார்ப்போம். அணுவை நம் கண்களால் காணமுடியாது. அதை பார்ப்பதற்கு நுண்ணோக்கியை பயன்படுத்துகிறோம். ஒரு அணுவின் அளவை ஒப்பிடும்போது,ஆப்பிள் அளவுக்கு அணுவை  பெரிதாக்கி பார்க்க வேண்டுமானால், ஆப்பியை பூமி அளவுக்கு பெரிதாக்கி பார்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

அந்த அளவுக்கு மிகச்சிய அணுவை பார்க்கும் அந்தநேரத்தில் நாம் காலத்தை விரிக்கிறோம்.

தொலைநோக்கியில் பார்க்கும் அந்த நேரத்தில் எப்படி காலத்தை சுருக்கினோமோ, அதுபோல நுண்ணோக்கியில் பார்க்கும்போது காலத்தை விரிக்கிறோம். அதாவது பல ஆயிரம் ஒளிஆண்டுகளுக்குப்பிறகு நம் சாதாரண காண்களால் காணப்போகும்  நிகழ்வுகளை இப்போதே நுண்ணோக்கியால் நம்மால் பார்க்க முடியும்.

..

ஒரு அணு எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளதோ அதே முறையில்தான் இந்த பிரபஞ்சமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி இன்னும் ஒரு கட்டுரையில் விரிவாக காணலாம்.

..

சென்னையோன்ற பெரு நகரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தபிறகு விடுமுறைக்கு சொந்த கிராமத்திற்கு வரும்போது,அதுவும் வயல்சார்ந்த கிராமத்திற்கு வரும்போது, அந்த கிராமமே மிகமெதுவாக இயங்குவதுபோல தோன்றும். இந்த உணர்வு உண்மைதான். பெருநகரத்தில் காலம் விரைவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கிராமத்தில் காலம் மிகமெதுவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நகரத்தில் மிகவேகமான வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள அறிவு கிராமத்தில் வயல்வேலை செய்பவனிடம் இருக்காது.இது உண்மை. வயல்வேலை செய்பவனை தரக்குறைவாக நினைப்பதாக நினைக்கக்கூடாது. அது உண்மையல்ல. நகரத்தில் உள்ளவன் வேகமாக காலத்தில் வாழ்ந்துவருகிறான். அவனது மூளை காலத்தால் முன்னோக்கி இருக்கிறது.

இதேபோல கிராமத்தில் வாழ்ந்த ஒருவன் நகரத்திற்கு செல்லும்போது, அது மிகவேகமாக இயங்கிக்கொண்டிருப்பதை உணர்வான். நகரவாழ்க்கைக்கு தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ள சில மாதங்கள் பிடிக்கும்.

..

இங்கே காலம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. சில இடத்தில் அதுவேகமாக இயங்குகிறது. சில இடத்தில் அது மெதுவாக இயங்குகிறது என்பதை விளக்குவதற்கு இதைக் கூறினேன்.நகரங்கள் மிகவேகமாக வளர்கின்றன மிகவேகமாக அழிந்துவிடுகின்றன. வரலாற்றைப்பார்த்தால் பழைய நகரங்கள் எல்லாம் அழிந்துவிட்டதைக் காணலாம். ஆனால் பழைய கிராமங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நகரங்கள் வளர்ச்சியின் ஒரு எல்லையை தொட்டதும் அழிந்துவிடும் என்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது. நிரந்தரமான நகரம் என்று எதுவும் இல்லை.

..

இதேபோல மனித இனம் என்பதும் தொடர்ந்து வளர்ந்துகோண்டே இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்பது நமது இந்திய வரலாற்றைப் படித்தவர்கள் தெரிந்துகொள்வார்கள். இமே பாரததேசத்தில் மகாபாரத காலத்தில் நாம் மிகவும் வளர்ச்சியடைந்த ஒருநிலையில் வாழ்ந்து வந்தோம். இப்போது இருப்பதுபோன்ற கருவிகள் அப்போது இல்லை. அதேபோல அப்போது உள்ள கருவிகள் இப்போது இல்லை. அப்போது மனிதன் மனோ சக்தியால் காற்றில் பறந்தான்.இப்போது விமானம் மூலம் பறக்கிறான் அவ்வளவுதான் வேறுபாடு.

..

இந்த வாழ்க்கை என்பதே ஒரு வட்டம்போலத்தான் இருக்கிறது. முன்னேறுபவர்கள் ஒரு கட்டத்தில் அழிவை சந்திப்பார்கள் பிறகு பின்னால் இருப்பவர்கள் முன்னேறுவார்கள். பின்பு அவர்களும் அழிவை சந்திப்பார்கள்.

நாம் உண்மையிலேயே பூமியைச்சேர்ந்தவர்கள்தானோ! இல்லை வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்களா?

இதற்கான விடை எப்போது நாம் வேறுகிரகத்தில் குடிபெயரத்தொடங்குகிறோமோ அப்போது கிடைத்துவிடும்.

..

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(28-5-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...